Friday 7 September 2012

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்

அதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் வரும்: ஆய்வில் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 01:27.08 பி.ப GMT ]
அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து பணிபுரியும் ஊழியர்களை சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறுகையில், அரசு அலுவலக ஊழியர்கள் 1000 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கணனி பணி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் கழுத்து வலி இருப்பதாகவும், தோள்பட்டை வலி இருப்பதாக 75 சதவிகித பேரும், முதுகு வலி இருப்பதாக 70 சதவிகித பேரும் கூறியுள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று 1980ஆம் ஆண்டுகளில் இருந்தே மருத்துவ ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இதையடுத்து ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, சோபாவில் சாய்ந்தபடி வேலை பார்க்கும் வசதிகளை சில முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தின.
அலுவலகங்களில் வீடியோகேம், ஒர்க்ஸ்டேஷன் போல கணனி சீட்களை மாற்றி அமைத்தனர். இதன் பிறகு ஊழியர்களின் கழுத்து, முதுகு வலிகள் ஓரளவு குறைந்தன. ஆனாலும் வலி பிரச்னைகள் முழுவதுமாக தீரவில்லை.
ஆண்டுகள் ஆக ஆக, இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்லா வேலைக்கும் இடம் விட்டு நகர வேண்டி இருந்தது. போன், கைபேசி, கணனி, இணைய வசதிகள் வந்த பிறகு நகர்தல் குறைந்து வருகிறது.
உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலைகளும் முடிகின்றன. மீட்டிங்கூட கான்பிரன்ஸ் கால் அல்லது வீடியோ கான்பரன்சில் முடித்து விடுகின்றனர். அதிக நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை ‘சேர் டிசீஸ்’ (நாற்காலி நோய்கள்) என்கிறது மருத்துவ உலகம்.
நாற்காலியை மாற்றுவதால், தரமான நாற்காலி போட்டுக் கொள்வதால் இப்பிரச்னை தீராது. வெகு நேரம் உட்கார்வதை தவிர்ப்பது அவசியம்.
இல்லாவிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கணனி முன்பு அதிக நேரம் உட்காரும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த அதிகாரிகள் என்றால் நோய் இன்னும் கடுமையாக தாக்கும்.

No comments:

Post a Comment